பண்டல்கண்ட் தொடர்பாக அமளி - லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: பண்டல்கண்ட் பகுதியில் தனி வளர்ச்சி வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல ராஜ்யசபாவிலும் இந்தப் பிரச்சினை வெடித்து ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் இன்று பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.
அவர் பேசுகையில், பண்டல்கண்ட் பிரதேச வளர்ச்சிக்காக தனி வாரியம் அமைப்பது தொடர்பாக உ.பி. மற்றும் ம.பி. அரசுகளுடன் மத்திய அரசு உரிய முறையில் ஆலோசனைகளை நடத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார்.
கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என்று அவர் கோரினார்.
அதேபோல, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் எழுந்து, உ.பி. மாநிலத்தில் தத்ரி மின் திட்டத்திற்குரிய காஸ் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதைக் கண்டித்துப் பேசினார்.
இரு பிரச்சினைகளிலும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் மொத்தமாக எழுந்து பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சபை மீண்டும் கூடியதும், கேஜி காஸ் விவகாரம் வெடித்தது. அதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா அளித்த விளக்கத்தால் மீண்டும் அமளி ஏற்படவே மீண்டும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினை ராஜ்யசபாவிலும் எதிரொலித்து அங்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது.