முகாம்களிலேயே தமிழர்களை நீண்ட காலத்திற்கு முடக்கி வைக்க ராஜபக்சே திட்டம் - ரணில்
கொழும்பு: தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தும் நோக்கில் ராஜபக்சே அரசு செயல்படவில்லை. முகாம்களிலேயே அவர்களை நீண்ட காலத்திற்கு முடக்கி வைக்க ராஜபக்சே திட்டமிட்டு செயலாற்றி வருகிறார் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை போதிய அளவு வழங்கப்படுவதில்லை. குடும்பத்தினர் தனித் தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரை ஏன் பிரித்து வைக்க வேண்டும். அவர்களை ஒரே முகாமில் வைப்பதில் என்ன சிக்கல்.
வன்னிப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு விரைவில் திரும்ப விரும்புகின்றனர். அதற்கான நிதியுதவியையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் வட பகுதியில் விடுதலைப் புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்திய பிறகே தமிழர்கள் அப் பகுதிக்கு அனுப்ப முடியும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.
உண்மையில் கண்ணி வெடிகள் இல்லாத இடங்களும் உள்ளன. போரில் வன்னிப் பகுதியில் 70 சதவீத வீடுகள் இடிந்துவிட்டன. எஞ்சிய வீடுகளும் சேதமடைதுள்ளன.
தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட எதிர்க்கட்சிக்கு கூட அரசு அனுமதி தர மறுக்கிறது. அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அரசு நிதி திரட்டி வருகிறது. இந்திய அரசு ரூ. 500 கோடி நிதி அறிவித்துள்ளது. அதுபோல் உலக வங்கியிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்களை முகாம்களில் வைத்து விட்டு இவர்கள் யாருக்காக இந்த நிதியை வசூல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் இருக்கும்போது வன்னிப் பகுதியை எப்படி சீரமைக்க முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications