சிபிஐ பெண் இன்ஸ்பெக்டருக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து தோடு, செயின் கொள்ளை
சென்னை: வெளி மாநிலங்களிலிருந்து சென்னை வரும் ரயில்களில் கை வரிசை காட்டி வரும் மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள், சிபிஐயைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டரிடமே கைவரிசையைக் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் சிபிஐ பெண் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பிரேமலதா. இவர் மும்பை - சென்னை மெயிலில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் சென்னைக்குப் பயணித்தார்.
நேற்று ரயில் சென்னை வந்து சேர்ந்தபோது மயங்கிய நிலையில் இவர் பெட்டியில் கிடந்தார். ரயிலை சுத்தப்படுத்துவதற்காக வந்த துப்புறவுப் பணியாளர்கள், பிரேமலதா கிடந்த கோலத்தைப் பார்த்து பயந்து போய், அவரை உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து பிரேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பிரேமலதாவின் கைப்பையை சோதனையிட்டபோது அவர் சிபிஐ இன்ஸ்பெக்டர் எனத் தெரிய வந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்த அவர் தனது தோடுகள், கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி ஆகியவை திருடு போயிருப்பதை உணர்ந்தார்.
போலீஸாரிடம் அவர் கூறுகையில், கடப்பாவில் நீட்டாக டிரஸ் அணிந்திருந்த ஒரு நபர் ஏறினார். பிரேமலதாவிடம் நட்பாகப் பேசிய அவர், குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை வாங்கி பிரேமலதா குடித்துள்ளார். ஆனால் அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததால் குடித்த சில நிமிடங்களில் பிரேமலதா மயங்கி விழுந்து விட்டார்.
அதன் பின்னர் அந்த ஆசாமி, பிரேமலதா அணிந்திருந்த தோடு, கழுத்துச் சங்கிலி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார்.
ஓடும் ரயில்களில் மயக்க பிஸ்கட், மயக்க மருந்து கொடுத்த குளிர்பானங்களைக் கொடுக்கும் கும்பல் குறித்து போலீஸார் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். அறிமுகம் இல்லாத யாரேனும் எதையாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு இன்ஸ்பெக்டரே அதிலும் சிபிஐ இன்ஸ்பெக்டரே இவ்வாறு குளிர்பானத்தை வாங்கிச் சாப்பிட்டு ஏமாந்தது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications