லஞ்சப் பணத்தில் சொகுசு பங்களா கட்டிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
மதுரை: வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் லஞ்சப் பணத்தில் சொத்து சேர்த்து சொகுசு பங்களா கட்டியுள்ளார். இதனையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கராஜ். இவர் லைசன்ஸ் கோரி வருபவர்களிடம் லஞ்சம் பெற்று சுமார் 27 லட்சம் ரூபாய் செல்வில் சொத்து சேர்த்து சொகுசு பங்களா கட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து லஞ்சஒழிப்புத் துறை டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த புரோக்கர்கள் முத்துபாண்டி, விக்னேஷ்வர், செந்தில்குமாரிடம் கணக்கில் வராத 18,650 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த பணம் அலுவலக கண்காணிப்பாளர் மனோகர், வாகன ஆய்வாளர் தங்கராஜூக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்தது என்று தெரியவந்தது.
இதை தொடர்ந்து கே.கே.நகரில் உள்ள தங்கராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது ஐந்து வங்கிகளில் 27 லட்சம் ரூபாய்க்கு நிரந்தர வைப்புத் தொகை செய்திருந்ததற்கான 58 ரசீதுகள் கைப்பற்றப்பட்டன.
இரவு முழுவதும் லஞ்சஒழிப்பு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.