For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்பாக்கத்தில் அதிகமான கதிர்வீச்சா?-ககோட்கர் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

கல்பாக்கம்: கல்பாக்கம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருப்பதாக வரும் தகவல்கள் பொய்யானவை என்று இந்திய அணு சக்திக் கழகத் தலைவர் அனில் ககோட்கர் கூறினார்.

அணுசக்தி மூலம் இயங்கும் அரிஹந்த் என்ற நீர்மூழ்கி கப்பலை கடந்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தக் கப்பல் 85 மெகாவாட் திறனுள்ள அணு உலையால் இயங்குகிறது. இந்த உலை கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி நிலையத்தில் தான் தயாரிக்கப்பட்டது.

இது குறித்து கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அனில் ககோத்கர் அளித்த பேட்டி:

அரிஹந்த் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அணு உலையை தயாரித்தவர்கள் கல்பாக்கத்தில் உள்ள அணுமின் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், அலுவலர்கள் தான்.

கல்பாக்கம் பகுதியில் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக செய்திகள் வருவது தவறான தகவலாகும்.

நாங்கள் தொடர்ந்து கதிர்வீச்சு அளவை கண்காணித்து வருகிறோம். இதற்காக மண், தாவரங்களில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டே வருகின்றன. கதிர்வீச்சு தன்மை, நிர்ணயித்த அளவைவிட மிக மிக குறைவாகத்தான் உள்ளது. மக்களை பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சு இல்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகள் எல்லாவற்றிலும் போதுமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இருப்பினும் தேவைப்பட்டால் வெளியில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இப்போது நடைபெறும் அணு உலை கட்டும் பணிகள் வரும் 2013ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளத்தில் முதலாவது அணு உலை கட்டும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான கருவிகள், உபகரணங்களை வாங்குவதில் ஏற்பட்டுள்ள தேக்கமே இதற்குக் காரணம். எனினும் கூடங்குளத்தில் அணு உலை நிர்மாணிக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும்.

இதேபோல சென்னை கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலைகளை நிறுவும் பணிகள், வரும் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவடையும்.

அணு சக்தி துறையில் மற்றொரு மைல் கல்லாக, உயர் வெப்ப அணு உலைகளை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் சிறிய அளவிலான உயர் வெப்ப அணு உலையை சோதனை முறையில் வடிவமைத்து வருகிறது.

இந்த உயர் வெப்ப அணு உலைகளில் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் பிரித்தெடுக்கப்படும். இந்த ஹைட்ரஜன், பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக வாகனங்களில் பயன்படுத்தப்படும்.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் இந்திய அணு உலைகளுக்குத் தேவையான அணு எரிபொருள்கள், மூலப்பொருள்களை தாராளமாக வழங்க பிற நாடுகள் முன்வந்துள்ளன.

நமது அணு உலைகளுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட எரிபொருள் வினியோகத்தில் இப்போது பற்றாக்குறை எதுவும் இல்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X