தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கிறது - தலைவர்கள் குவிகிறார்கள்
சென்னை: தமிழக சட்டசபை இடைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியத் தலைவர்கள் பிரசாரத்தைத் தொடங்குவதால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இளையாங்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதிகளுக்கு வருகிற 18ம் தேதி இடைத் தேர்தல் வருகிறது.
முக்கியக் கட்சியான அதிமுக தலைமையில் பாமக, மதிமுக ஆகியவை தேர்தலைப் புறக்கணித்து விட்டன.
அக்கூட்டணியில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனி அணியாக போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் நான் முனைப் போட்டி நிலவுகிறது. இருப்பினும் உண்மையான மோதல் என்று பார்த்தால் அது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும், தேமுதிகவுக்கும்தான்.
5 தொகுதிகளிலும் 67 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
அழகிரி பிரசாரம்...
வருகிற 5-ந் தேதி கம்பம் தொகுதியிலும், 6-ந் தேதி இளையான்குடி தொகுதியிலும், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மு.க.அழகிரி பிரசாரம் செய்கிறார்.
நாளை முதல் ஸ்டாலின்..
நாளை முதல் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
கனிமொழியும் பிரசாரம்...
திமுக எம்.பி. கவிஞர் கனிமொழி ஐந்து தொகுதிகளிலும் தலா ஒரு நாள் பிரசாரம் செய்கிறார்.
10-ந் தேதி தொண்டாமுத்தூரிலும், 11-ந் தேதி பர்கூரிலும், 13-ந் தேதி ஸ்ரீவைகுண்டத்திலும், 14-ந் தேதி இளையான்குடியிலும், 15-ந் தேதி கம்பம் தொகுதியிலும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
12 நாள் பிரசாரத்தில் விஜயகாந்த் ...
அதிக வாக்குகளை அள்ளும் பிரகாசமான வாய்ப்புகளுடன் உள்ள தேமுதிகவின் வெற்றியை உறுதி செய்ய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் 12 நாள் பிரசாரத்தில் குதிக்கிறார்.
5, 6 தேதிகளில் இளையான்குடி தொகுதியிலும், 7, 8 தேதிகளில் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளிலும், 9, 10 தேதிகளில் கம்பம் தொகுதியிலும், 11, 12, 13 தேதிகளில் பர்கூர் தொகுதியிலும், 14, 15, 16 தேதிகளில் தொண்டாமுத்தூர் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.
கம்யூ வழி தனி வழி...
அதிமுக கூட்டணியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறி வந்து விட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனிப் பாதையில் தங்களது அமைதியான பிரசாரத்தை மேற்கொள்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதியில் இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.
கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, முன்னாள் எம்.பி. அப்பாதுரை ஆகியோரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் செவ்வாய்க்கிழமை கம்பம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
தா.பாண்டியன், என்.வரதராஜன் ஆகியோர் 9-ந் தேதி கம்பம் தொகுதியிலும், 10-ந் தேதி ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், 11-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், 12-ந் தேதி பர்கூர் தொகுதியிலும் கூட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இவர்கள் தவிர கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சிறு சிறு கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் குதித்துள்ளனர். சுயேச்சைகளும் தங்களுக்கே உரிய பாணியில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக போட்டியிட்டிருந்தால் பெரும் விறுவிறுப்பாகியிருக்க வேண்டிய தேர்தல் களத்தில் அது சற்று குறைவாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications