எம்.ஜி.ஆர். விசுவாசிகள் வாக்கு எனக்கே-விஜயகாந்த்
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்த தேமுதிக செயல் வீரர்கள் கூட்டத்தில் தனது கட்சியின் கம்பம் (அருண்குமார்), ஸ்ரீவைகுண்டம் (சவுந்தரபாண்டியன்), இளையாங்குடி (பாலகிருஷ்ணன்) வேட்பாளர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிறுவயதில் இருந்தே நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அதனால்தான் எம்.ஜி.ஆர். மீது இன்றும் பற்று வைத்துள்ளேன்.
எம்.ஜி.ஆர். இருக்கும் வரை திமுக வெற்றி பெற்றதும் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் இல்லை. தற்போது வெற்றி பெற்றும் கூட திமுக அரசு மைனாரிட்டியாக உள்ளது. இதனால்தான் மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களை மிரட்டி தங்கள் பக்கம் திமுக இழுக்கிறது.
தாங்கள் வெட்டும் குழியில் அவர்களே விழும் நிலை உள்ளது.
அதிமுக தேர்தலை புறக்கணிப்பது அவர்களது இஷ்டம். அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த இடைத்தேர்தலில் உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசிகள் தேமுதிகவுக்கு வாக்களிப்பார்கள். நல்லக்கட்சிக்கு, உண்மையான கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக திமுக ஆட்சி நடந்தபோதும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. நல்லது செய்தோம் என்று சொல்கிறவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை ஏன் வாரி இறைக்க வேண்டும்?.
வாக்காளர்கள் தற்போது தேமுதிகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். தேமுதிகவுக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற பயத்தில் திமுகவினர் முரசு சின்னம் வரைவதை தடுக்கின்றனர். வரைந்த சின்னத்தை அழிக்கின்றனர்.
திமுக ஆட்சியில் அடிதடி, அராஜகம், அக்கிரமம், விலைவாசி உயர்வுதான் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க பொதுத்தேர்தலில் திமுகவுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள்.
வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மின்னணு எந்திரத்தில் வாக்காளர்கள் பட்டனை அழுத்தும்போது 'பீப்' என சத்தம்தான் வருகிறது. வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என தெரிய வேண்டும். இல்லாவிட்டால் எந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார் விஜயகாந்த்.