தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள்-அழகிரி
சென்னை கிண்டியில் உள்ள பிளாஸ்டிக் என்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி மையத்தில் உயர் கல்வி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அழகிரி,
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபடுவது போல நானும் செயல்பட வேண்டும் என்று இங்கு பேசிய தொழில்துறை செயலாளர் கூறினார்.
நான் சென்னை வந்தபோது இதே கோரிக்கையை அவரிடம் வைத்தேன். தென் மாவட்டங்களில் அதிகமாக தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மேலூர் பகுதியில் கிரானைட் கற்களை பாலீஷ் செய்யும் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும்படி கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் முதல்வரை சந்தித்தபோதும் எல்லா தொழிற்சாலைகளையும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் பகுதியிலேயே அமைக்கிறீர்கள். தென் மாவட்டங்களிலும் நீங்கள் தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், நீ இடத்தை மட்டும் தேர்வு செய். எத்தனை தொழிற்சாலை வேண்டுமானாலும் தருகிறேன் என்றார்.
அதன் அடிப்படையில் தென் மாவட்ட கலெக்டர்களை அழைத்து எங்கெங்கு அரசு இடம் தொழிற்சாலை அமைக்கக்கூடிய வகையில் இருக்கிறது என்ற பட்டியலை கேட்டிருக்கிறேன். நிச்சயமாக வட பகுதியில் இருப்பதை விட தென் மாவட்டங்களில் அதிக தொழிற்சாலை கொண்டு வருவேன்.
மூடப்பட்டுள்ள ஸ்பிக் தொழிற் சாலையையும் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஒரு மாதத்திற்குள் நிச்சயம் ஸ்பிக் தொழிற்சாலை திறக்கப்படும்.
மதுரையில் பாலிடெக்னிக் அமைத்து தர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடியிடம் கேட்டேன். அவரும் அமைத்து தருவதாக கூறியுள்ளார். சென்னையில் உள்ள பிளாஸ்டிக் உயர் தொழில்நுட்ப மையம் போல நவீன வசதிகள் கொண்ட ஒரு தொழில் மையத்தை விரைவில் மதுரையில் நிறுவப்படும் என்றார் அழகிரி.
அரசியல் உயர் கல்வி.. அழகிரிக்கு தென்னரசு ஐஸ்:
இந் நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் இந்த உயர்கல்வி மையம் அமைகிறது. இந்த உயர்கல்வி மையத்தை இன்னொரு 'உயர்கல்வி மையமே' அடிக்கல் நாட்டி திறந்து வைப்பது சிறப்புக்குரியதாகும்.
அரசியலில் பலருக்கு உயர் கல்வியை கற்றுத்தருபவர் அழகிரி. குறிப்பாக தேர்தல் வந்தால் அதை எப்படி சந்தித்து வெற்றி கொள்வது என்கிற உயர் கல்வியை திமுகவினருக்கு மட்டும் அல்ல அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கற்றுத் தருபவர் மு.க.அழகிரி.
இந்த இடைத்தேர்தல் நேரத்தில் கூட அங்குள்ள பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொழில் மீது தாம் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்றார்.