நீதிபதிகள் சொத்துக் கணக்கை காட்ட வகை செய்யும் மசோதா - தடுத்து நிறுத்திய எதிர்க்கட்சிகள்
டெல்லி: ராஜ்யசபாவில் நேற்று அறிமுகப்படுத்தப்படவிருந்த நீதிபதிகள் (சொத்துக் கணக்கை காட்டும்) மசாதாவை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை அரசாங்கத்திடம் தாக்கல் செய்ய வகை செய்யும் சட்ட மசோதா (நீதிபதிகள் சொத்து கணக்கு மசோதா) ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
அதன்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தலைமை நீதிபதியிடமும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் அந்தந்த தலைமை நீதிபதிகளிடம் தங்களது சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த சொத்து கணக்கு விவரங்கள், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படமாட்டாது ரகசியமாக வைக்கப்படும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் இதுகுறித்துத் தெரிந்து கொள்ள முடியாது என்று அந்த மசோதாவின் 6-வது பிரிவில் கூறப்பட்டு உள்ளது.
நேற்று இந்த மசோதாவை தாக்கல் செய்ய ராஜ்யசபா துணைத் தலைவர் ரஹ்மான் கான், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை அழைத்தார்.
ஆனால், பாஜக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, மசோதாவின் 6வது பிரிவு அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணாக உள்ளது. அதை நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், அரசியல் சாசனச் சட்டத்தின் 19 (1) ஏ பிரிவு, நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களும் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், தங்களது சொத்துக் கணக்கை பகிரங்கமாக காட்ட வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் தற்போது நீதிபதிகளின் சொத்து கணக்கு குறித்த விவகாரத்தில் மட்டும் வேறு விதமான அளவுகோல் கடைப்பிடிக்கப்படுவது மிகவும் பாரபட்சமானது.
நீதித்துறை அனைவரையும் விட உயர்ந்த துறை என்று அரசியல் சாசனச் சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. இந்த மசோதாவை நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்க்கவில்லை. மாறாக, 6வது பிரிவு மிகவும் பாரபட்சமானதாக, முரண்பாடாக உள்ளதால் அதை மட்டும் எதிர்க்கிறோம் என்றார்.
அதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இது முக்கியமான மசோதா, அனைவரும் ஒப்புக் கொண்ட மசோதா என்றார்.
ஆனால் அவரது பேச்சை எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் மசோதாவை தாக்கல் செய்யும் முடிவை ஒத்திவைத்து விட்டு அமர்ந்தார் மொய்லி.
லோக்சபாவில் இருப்பதைப் போல ராஜ்யசபாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு போதிய பெரும்பான்மை பலம் இல்லை என்பது நினைவிருக்கலாம். மேலும், நேற்று பாஜக, இடதுசாரி உறுப்பினர்கள் ஒன்றாக மசோதாவின் 6வது பிரிவை எதிர்த்து குரல் எழுப்பியதால் காங்கிரஸ்
வட்டாரம் அதிர்ச்சி அடைந்து விட்டது.
இதனால்தான் மசோதாவை அறிமுகப்படுத்தினால் அது நிச்சயம் தோல்வி அடையும் என்பதை உணர்ந்தே தாக்கல் செய்வதை காங்கிரஸ் அரசு தள்ளிப் போட்டு விட்டது.












Click it and Unblock the Notifications