49 (O) பிரிவை பயன்படுத்துமாறு கூறி அதிமுக பிரசாரம்
சட்டசபை இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுகவினர் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இந்த இடைத் தேர்தல் நிகழ்வுகளை அதிமுகவினர் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இளையாங்குடி அதிமுகவினர் நூதனப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிப்பதற்கு, 49(ஓ) படிவம் வாக்குச்சாவடிகளில் தரப்படுகிறது. இதை வாக்காளர்கள் பெற்று பூர்த்தி செய்து தரலாம்.
இந்தப் படிவத்தை பயன்படுத்துமாறு வீடு விடாக சென்று அதிமுகவினர் மக்களிடம் கூறி வருகின்றனர். ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறினால் சட்டப் பிரச்சினை வரும் என்பதால் அதற்குப் பதில், 49(ஓ) படிவத்தைப் பயன்படுத்துமாறு கூறி அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் இப்படிச் செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவிடவில்லையாம். அவர்களாகவே இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், மற்ற தொகுதியில் உள்ள அதிமுகவினரும் இதேபோல செய்யலாமா என்று யோசித்து வருகின்றனர். இருந்தாலும் கட்சி உத்தரவிடாத நிலையில் நாமாக செய்து ஏதாவது ஆகி விடுமோ என்ற குழப்பத்திலும் உள்ளனராம்.