சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக மாஜி தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்ட்
சென்னை: சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவராக இரு்நதவர் சுரேஷ். இந்தப் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், புதிய பணியில் சேராமல் விடுமுறை போட்டு விட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார்.
இவர் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும், ஏராளமான அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.
துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் என்ற முறையில் அந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள பங்களாவில் சுரேஷ் வசித்து வந்தார். இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் வீட்டையும் அவர் காலி செய்யவில்லை.
இந்த நிலையில் 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு இன்று காலை முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.