கும்மிடிப்பூண்டி முகாமில் அகதிகள் மோதல் - தந்தை, 2 மகன்களுக்கு அரிவாள் வெட்டு
சென்னை: சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில், குடிபோதையில் இருந்த அகதிகள் செய்த அட்டகாசத்தைத் தட்டிக் கேட்ட தந்தை மற்றும் இரு மகன்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வநாயகம். இவரது மகன்கள் நாகேந்திரன், ஜெயந்தன்.
நேற்று இரவு இதே முகாமை சேர்ந்த வாலிபர்கள் ஜெகன், கிருபா, இளையராஜா, பிரபு, செல்வம் மற்றும் யோகேந்திரன் ஆகிய 6 பேர் குடிபோதையில் முகாமில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் சுற்றி கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்களை ஆபாசமாக திட்டி கொண்டிருந்தனர்.
இதை நாகேந்திரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் நாகேந்திரன், தந்தை செல்வநாயகம், தம்பி ஜெயந்தன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டியது.
நாகேந்திரன் தலையிலும் செல்வநாயகம் இடது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. கவலைக்கிடமான நாகேந்திரன் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வநாயகமும் ஜெயந்தனும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி விட்ட அந்த ஆறு அகதிகளையும் தேடி வருகின்றனர்.