எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை தருவதை எதிர்த்து வழக்கு
சென்னை: தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம், சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை தொடர சமீபத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, டிராபிக் ராமசாமிக்கு அனுமதி அளித்திருந்தார்.
இதையடுத்து நேற்று தனது மனுவைத் தாக்கல் செய்தார் ராமசாமி.
அதில்,
சட்டமன்ற உறுப்பினர் பதவி 5 ஆண்டு காலமாகும். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்கள். எனவே அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை. கவுரவ அடிப்படையில் போக்குவரத்து, தங்கும் இட வாடகை சேர்த்து ஊதியம் வழங்கப்பட்டது. அதுவும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது இப்போது ஆடம்பர பதவியாக உருவாகிவிட்டது. குளிர்சாதனம், டி.வி., தொலைபேசி போன்ற நவீன வசதிகள் கொண்ட ஆடம்பரமான தங்கும் இடம் இவர்களுக்கு சென்னை அரசினர் தோட்ட வளாகத்திற்குள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம், பென்சன் போன்றவை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
3 ஆண்டாக தொடர்ந்து உயர்த்தியதால் சம்பளம் ரூ.50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குகூட, இந்த சம்பளம் கிடையாது.
இதுமட்டுமல்லாமல், சென்னை அருகே ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ஒன்றரை கிரவுண்டு நிலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் தங்குவதற்கு ஏற்கனவே ஆடம்பரமான தங்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்த ஊரில் வீடு, நிலங்கள் உள்ளன. அப்படியிருக்க, இவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க தேவையில்லை.
10 ஆண்டுகளாக குடிசையில் வாழ்பவர்கள் கூட, இன்னும் வீடு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். ஆகவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை உயர்த்தவும், பென்சனை அதிகரிக்கவும், இலவச வீட்டுமனை வழங்கவும் நிறைவேற்றிய தீர்மானத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி மனு அனுப்பினேன். ஆனால், அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எனது மனுவை பரிசீலிக்க வேண்டும். சம்பள உயர்வு, வீட்டுமனை தொடர்பாக முன்தேதியிட்டு நிறைவேற்றிய தீர்மானத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட வேண்டும். வழக்கு முடியும்வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.