சுரேஷ்குமாரின் தலை எரிப்பு-குற்றப் பத்திரிக்கையில் போலீஸ்
சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் குமார் நேமிசந்த் ஜெயின் என்பவால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி 3 இடங்களில் வீசினான் நேமிசந்த். ஆனால், தலை மட்டும் சிக்கவில்லை.
இந்தத் கொலை வழக்கில் ஒனறரை மாதங்களுக்குப்பின் நேமிசந்த் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டான்.
அவனிடம் போலீசார் விசாரித்தபோது, சுரேஷ் குமாரின் தலையை அடித்து உடைத்து நொறுக்கி எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள புதர் பகுதியில் வீசியதாக கூறினான்.
ஆனால், புதருக்குள் போலீசார் பல நாட்கள் தேடியும் தலை கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந் நிலையில் இந்த தலை பிரச்சனைக்கு போலீசார் புதிய தீர்வு கண்டுள்ளனர். அதன்படி நேமிசந்த் தலை பகுதியை வீசியதாக சொன்ன புதர் பகுதியையொட்டிய குப்பைமேட்டிலிருந்து வழக்கமாக குப்பை அள்ளும் மாநகராட்சி லாரி அதையும் சேர்த்து வாரிச் சென்றுள்ளது.
இந்த குப்பைகளோடு கலந்து விட்ட சுரேஷ் குமாரின் நொறுங்கிய தலைபகுதியை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளோடு தீவைத்து எரிக்கப்பட்டுவிட்டது. எனவே தலை பகுதியை கைப்பற்ற முடியவில்லை என்று குற்றப் பத்திரிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தலை கிடைக்காவிட்டாலும் இந்த வழக்கில் நேமிசந்த் தப்ப முடியாது என்று போலீசார் கூறுகின்றனர். கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து அது சுரேஷ் குமாரின் உடல் தான் என்பது உறுதியாகிவிட்டதாலும், நேமிசந்தின் வீட்டில் கிடைத்த தடயங்களில் அங்கு தான் சுரேஷ் கொல்லப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாலும் நேமிசந்துக்கு உயர்ந்தபட்ச தண்டனை கிடைப்பது உறுதி என்று போலீசார் நம்புகின்றனர்.