அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்த மம்தா
டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.
டெல்லியில் இருந்து கொண்டே நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு வாரங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்திய மம்தா இம்முறை கூட்டத்தையே புறக்கணித்துள்ளார்.
அமைச்சர்கள் இல்லாததால் அவையில் அமளி..
இதற்கிடையே மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா மக்களவையில் இல்லாததால் அவையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
ரப்பர் தொடர்புடைய மசோதா ஒன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் அந்தத் துறையி்ன அமைச்சர் ஆனந்த் சர்மா, அவரது துறையின் இணையமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவையில் இல்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இரு அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்க வெளிநாடு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.