பஸ்சில் ஏற முயன்ற சிறுமி நெரிசலில் சிக்கி பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் பஸ்சில் ஏற முயன்ற பள்ளிச் சிறுமி கூட்ட நெரிசலில் சிக்கி, மிதிபட்டு, மூச்சுத் திணறி பலியானார்.
விழுப்புரம் அருகே உள்ள மேல்வானை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகள் சுகாசினி (11). இவர் கண்டாச்சிபுரம் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை பள்ளிக்குச் செல்ல தனது கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். பேருந்து வந்தவுடன் அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினர். இதில் சிறுமி சுகாசினி கீழே விழுந்தார்.
அதை கவனிக்காத பிற பயணிகள் அவர் மீது ஏறி மிதித்துள்ளனர். அதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுகாசினி மயங்கினார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான பேருந்துகள் இந்த ஊரில் நிற்காமல் செல்வதால் தான் எப்போதும் இங்கு கூட்ட நெரிசல் நிலவுவதாக பொது மக்கள் புகார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications