அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யட்டுமே-ஸ்டாலின்
மதுரை: மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்ததாக கூறும் ஜெயலலிதா தனது கூட்டணி கட்சி எம்பிக்கள் 12 பேரையும் ராஜினாமா செய்யச் சொல்லட்டுமே. அதை அவர் செய்வாரா என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில்,
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு வந்துள்ளேன். மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பல இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். அவற்றை விட சிறப்பான வெற்றியை இந்த இடைத் தேர்தலில் பெறுவோம்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக 5 தொகுதிகளின் இடைத் தேர்தல்களை புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். இன்றைக்கு சொல்வதை நாளைக்கு அவர் மாற்றிச் சொல்வார். தான் போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தான். எனவே அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
மின்னணு எந்திரத்தில் முறைகேடு, ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவில்லை என்றெல்லாம் கூறும் ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்றுள்ள 12 எம்.பிக்களையும் ராஜினாமா செய்ய சொல்லட்டுமே. ராஜினாமா செய்துவிட்டு இப்படி சொல்லட்டுமே. அதை அவர் செய்வாரா என்றார்.
அதிமுக எம்.பிக்கள் விலகத் தயாரா?-காங்:
மின்னணு இயந்திரங்களைக் குறை கூறும் ஜெயலலிதா, தனது கட்சி சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களை ராஜினாமா செய்யுமாறு கூறுவாரா என்று காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம் சவால் விட்டுள்ளார்.
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மின்னணு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதால்தான் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்ததாக ஜெயலலிதா கூறுகிறார். நாங்கள் ஒரு வேளை மோசடி செய்திருந்தால், 27 இடங்களில் வென்றிருப்பதற்குப் பதில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் வென்றிருப்போம்.
2001ம் ஆண்டு அதிமுக தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. கடந்த லோக்சபா தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இங்கெல்லாம் கூட மின்னணு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. அப்படியானால் இங்கெல்லாம் அதிமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றதா?
ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஐந்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி, அதிக அளவிலா வாக்குகளைப் பெற்றுத் தரும் மாவட்டச் செயலாளருக்கு 25 பவுன் தங்கச் சங்கிலி தருவதாக கூறியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியிலும், அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு தங்கப் பதக்கம் தரப்படும் என்றார் சுதர்சனம்.