இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டேன் - அத்வானி
பாஜகவில் என்றும் இல்லாத அளவுக்கு உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது. நிலைமை எரிமலை போல இருப்பதாக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.
லோக்சபா தேர்தல் தோல்வியை மையமாக வைத்து கட்சி இரண்டுபட்டு நிற்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறப் போவதில்லை என்று அத்வானி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய அத்வானி அவர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அத்வானி அளித்த பதில்களும்..
கேள்வி - எதிர்க்கட்சித் தலைவராக தொடருவீர்களா?
பதில் - (அருகில் இருந்த சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார்) ஐந்து ஆண்டுகளுக்கு அவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேள்வி - நாங்கள் அத்வானியிடம் கேட்கிறோம். நீங்கள் பதவியைத் தொடருவதில் பிடிவாதமாக இருக்கிறீர்களா. கட்சியினர் உங்களை இப்பதியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறீர்களா அல்லது தொடர வேண்டும் என நீங்களே நினைக்கிறீர்கள?
பதில் - எந்தப் பிடிவாதம் இங்கு இல்லை.
ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. புதிய தலைவர் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காகவாவது அத்வானி சிறிது காலத்திற்கு ஓய்வு பெறக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். இதனால்தான் ஓய்வு பெறும் முடிவை அத்வானி தள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.
ஆனால் அத்வானி எதிர்ப்பாளர்கள், ஜஸ்வந்த் சிங் தலைமையில் கொடி பிடிக்க காத்திருக்கிறார்களாம். இந்தக் கூட்டணியில் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.