முத்துக்கருப்பன் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன!
சென்னை: நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் மூலமாக பிரபலமான முன்னாள் சென்னை ஆணையர் முத்துக்கருப்பன் மீதான 2 ஊழல் வழக்ககுளை கைவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் முத்துக்கருப்பன் சென்னை நகர ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரை வைத்து கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ய உத்தரவிட்டார் ஜெயலலிதா.
அந்த சம்பவத்திற்குப் பின்னர் முத்துக்கருப்பன் ஊழல் புகாரில் சிக்கினார். சென்னை அண்ணா நகரில் நிலத்தை அபகரித்தது, மினரல் வாட்டர் கம்பெனி நடத்தியது, பால் பண்ணை நடத்தியது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஆகிய சர்ச்சைகளில் சிக்கினார்.
மேலும், 20 போலீஸாரை தனது பால் பண்ணை மற்றும் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலைக்கு பயன்படுத்தியது தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இதையடுத்து முத்துக்கருப்பனை ஜெயலலிதா சஸ்பெண்ட் செய்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் முத்துக்கருப்பன்.
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை விலக்கப்பட்டது. திருச்சி ஆயுதப் போலீஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீதான இரு ஊழல் புகார்களையும் கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை இருந்து வந்த ஊழல் சர்ச்சையிலிருந்து விடுபட்டுள்ளார் முத்துக்கருப்பன்.
மதுரையைச் சேர்ந்த முக்கியப் புள்ளியை முத்துக்கருப்பன் நாட, அவரது ஆசியின் பேரிலேயே இப்போது ஊழல் புகாரிலிருந்து முத்துக்கருப்பன் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் தலைமையிடம் நெருக்கமாக இருந்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஓரம் கட்டப்பட்டிருந்த சிவனாண்டி, திமுக ஆட்சியுடன் தற்போது ராசியாகி, முக்கியப் பதவியை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், இப்போது முத்துக்கருப்பனும், திமுக ஆட்சியுடன் ராசியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோர் (இவர்களும் கூட கருணாநிதி நள்ளிரவுக் கைது சம்பவத்தை அரங்கேற்றிய குழுவில் இடம் பெற்றிருந்தர்கள்தான்) இன்னும் சாதாரண பதவிகளில் உழன்று கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications