'ஜெ. தேர்தல் புறக்கணிப்பு பிரசாரம் செய்யலாமே'!
சென்னை: தேர்தலை புறக்கணிப்பது ஏன் என்பதை விளக்கி இடைத் தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்து தானும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடபபட்டுள்ள கிருஷ்ணசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆகும். ஜனநாயகம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நியாயமாக நடக்க வேண்டும்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தல், பல்வேறு தவறான ஜனநாயக நெறிமுறைகளை அறிமுகம் செய்துவிட்டது. என்றும் இல்லாத அளவிற்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.
அனைத்து தொகுதிகளிலும் தகுதி வாய்ந்த பல லட்சம் பேரின் வாக்குரிமைகள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்றிருந்தவர்களும் நிறைய பேர் வாக்களிக்க முடியவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் குளறுபடி, மோசடி நடந்ததாக தேர்தல் ஆணையத்திடம் பல கட்சிகள் முறையீடு செய்தும், அது விசாரிப்பதற்கு முன்பாக 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மத்திய அமைச்சராக உள்ள மு.க.அழகிரி, திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிக வாக்கு பெற்றுத்தரும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு 25 பவுன் தங்க சங்கிலி பரிசு என்று அறிவித்துள்ளார். இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் ஆகும்.
சட்டமன்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தது நியாயமானது. ஆனால், அதிமுக தேர்தலை ஏன் புறக்கணிக்கிறது என்பதை ஜெயலலிதா 5 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து நான் நாளை முதல் ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, கம்பம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications