For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெற்கு ரயில்வேயைப் பிரிக்க கேரள அதிகாரிகள் முயற்சி - ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss
ஈரோடு: தெற்கு ரயில்வேயைப் பிரித்து, கேரளாவுக்கென்று தனியாக ஒரு ரயில்வேயை உருவாக்க கேரளாவைச் சேர்ந்த மத்திய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதை தமிழகம் தடுத்து நிறுத்தாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்திற்கு இரட்டை ஆபத்து...

தமிழகம் விரைவில் இரட்டை ஆபத்துகளை எதிர்நோக்கி இருக்கிறது.

தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என்று தனியாக ஒரு ரயில்வே அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் ரகசியமாக நடந்து வருகிறது.

தற்போது கேரளாவை சேர்ந்தவர்கள் டெல்லியின் செல்வாக்கு மிகுந்த அதிகாரிகளாக பதவி வகித்து வருகின்றனர். மத்திய ரயில்வே இணை அமைச்சராக கேரளாவை சேர்ந்த அகமது பொறுப்பேற்று இருக்கிறார். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தெற்கு ரயில்வேயை பிரித்து தனியாக ரயில்வேயை தொடங்க ரகசிய திட்டம் போட்டு உள்ளனர்.

தெற்கு ரயில்வேயையே இரண்டாக பிரிக்கும் திட்டம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் உள்ளது. இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் திமுக வெற்றி பெற வேண்டும்.

அடுத்து பெரியாறு அணை பிரச்சினை. முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், கேரள எம்பிக்களும் டெல்லியில் முகாமிட்டு மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.

அதன்பேரில் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து நேரில் வந்து ஆய்வு செய்கிறேன் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்து இருப்பதாக கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேம்சந்திரன் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

பவன்குமார் பன்சாலுக்கு முல்லைப் பெரியாறு அணையில் என்ன வேலை? அவர் பொறியியல் வல்லுநரா? இல்லை நீரியல் வல்லுநரா?.

தமிழக முதல்வர் மத்திய அரசை அறிவுறுத்தி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்படும் என்ற அறிவிப்புதான் வரும் என்றார் ராமதாஸ்.

ஓணம்: சென்னை- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள்:

இந் நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், கண்ணூர், மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அடுத்த மாதம் 2ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை-கண்ணூர், கண்ணூர்-சென்னை, சென்னை -மங்களூர், மங்களூர்- சென்னை, சென்னை-திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-செனனை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

சென்னையில் 'ஓணம்' விடுமுறை:

இந் நிலையில் ஓணம்' பண்டிகையையொட்டி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும், அதற்கு பதிலாக செப்டம்பர் 12ம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X