அருணா கொலை-கொழும்பு தப்ப முயன்ற எஸ்.ஏ.ராஜா கைது!
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் சமீபத்தில் எஸ்.ஏ.ராஜாவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த எஸ்.ஏ.ராஜாவும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கார் மூலம் நெல்லையிலிருந்து எஸ்.ஏ.ராஜா திருச்சி வந்தார். இன்று காலை, அவர் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல இருந்தார்.
எஸ்.ஏ.ராஜா விமானம் மூலம் தப்பிச் செல்ல முயல்வதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய போலீஸார் எஸ்.ஏ.ராஜாவைக் கைது செய்தனர்.
விமான நிலைய காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நெல்லை போலீஸாருக்கும் ராஜா குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லை போலீஸார் திருச்சி விரைந்துள்ளனர்.