தமிழக வாகனங்களை தடுத்த கேரள பாஜகவினர்
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்குள் தமிழக வாகனங்களை நுழைய விடாமல் தடுத்து கேரள பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு மணல், ரேஷன் அரிசி ஆகியவை கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க எல்லைப் பகுதியில் 18 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகளை தமிழக அரசு அமைத்து கேரளத்திற்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட்டு வருகிறது.
இதன் மூலம் கேரளத்துக்கு மணல் கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுவிட்டதால் அந்த மாநிலத்தில் கட்டுமானப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. (அவர்களது ஆறுகளில் மணல் அள்ள மாட்டார்களாம்.. அதனால் அவர்களது இயற்கை வளம் கெட்டு விடும் என்பதால் தமிழக ஆறுகளில் இருந்து கடத்துவார்களாம்).
இதையடுத்து கேரள பாஜகவினர் தமிழக வாகனங்களை கேரளத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பாறசாலை சந்திப்பில் இருந்து காராளி பகுதிக்கு ஊர்வலமாக வந்து மறியல் போராட்டம் நடத்திய அவர்கள் தமிழக பதிவு எண் கொண்ட பைக்குகள், கார்கள், லாரிகள், வேன்கள், பேருந்துகளைகேரள பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி தமிழகதுக்கே திருப்பி அனுப்பினர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். அதே போல கேரளத்தில் இருந்து அந்த மாநில வாகனங்கள் தமிழக பகுதிக்குச் செல்லவும் அனுமதித்தனர்.
இதனால் 3 மணி நேரம் தமிழக வாகனங்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயின. பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றதால் போக்குவரத்து சீரானது.












Click it and Unblock the Notifications