ராகிங் செய்தால் டிஸ்மிஸ் - அண்ணா பல்கலை. துணைவதேந்தர் எச்சரிக்கை
சென்னை: ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, ஏ.சி. டெக் கல்லூரி, எஸ்.ஏ.பி. கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளிலும் இளநிலை படிப்பில் 1700 பேரும் முதுநிலை படிப்பில் 1500 பேர் உள்பட மொத்தம் 3200 பேர் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். சீனியர் மாணவர்கள் 6 ஆயிரத்து 600 பேர் உள்ளனர்.
புதிதாக சேர்ந்த மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் ராக்கிங்கில் ஈடுபட மாட்டோம். அதற்கான தண்டனை பற்றி தெரியும் என்று உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கி உள்ளோம்.
ஏதாவது ஒரு மாணவர் ராக்கிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவருக்கு எக்காரணத்துக்காகவும் மன்னிப்பு கிடையாது. எச்சரித்து விடும் பேச்சுக்கும் இடமில்லை. உடனடியாக கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்.
3 ஆண்டுகள் அந்த மாணவர் வேறு எந்த கல்லூரியிலும் சேர முடியாது. போலீசிலும் வழக்குப்பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.
சீனியர் மாணவர்களை அழைத்து டீன்கள் மற்றும் துறை தலைவர்கள் பேசி உள்ளனர். ராக்கிங் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.
ராக்கிங் பற்றி புகார் தெரிவிக்க பல்கலைக்கழக வளாகத்தில் முக்கிய இடங்களில் கருப்புப் பெட்டிகள் என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்படும்.
ராக்கிங் செய்யும் மாணவர்கள் பற்றிய புகார்களை இந்த பெட்டியில் போடலாம். தினமும் காலையிலும், மாலையிலும் திறந்து பார்த்து புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ராக்கிங் தொடர்பாக கண்காணிப்பதற்காக 5 பேராசிரியர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் பற்றி கல்லூரி முதல்வர்களே போலீசில் புகார் செய்யலாம் என்றார்.












Click it and Unblock the Notifications