காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 1500 பாக். தீவிரவாதிகள்
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் 1500 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எல்லை பகுதியில் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோட்டு பகுதியை தாண்டி இந்தியாவுக்குள் அடிக்கடி ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதே போல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவிருக்கும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் அந்த அமைப்பு கடந்த மூன்று வாரத்தில் சுமார் 50 தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்துள்ளதாக உளவு துறை செய்திகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் மேலும், சுமார் 1500 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவர்கள் சிறு சிறு குழுக்களாக ஊடுருவ முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதை முறியடிக்க அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊடுருவிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் இரவு, பகலாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் லஷ்கர் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47, வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் காஷ்மீரில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை முழு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில ராணுவ உயரதிகாரிகள் கூட்டம் நேற்று ஜம்முவில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் இருக்கும் நாக்ரோடா பகுதியில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட காஷ்மீர் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகரும், லெப்டினன்ட் ஜெனரலுமான ஆர்.கே.சாமி கூறுகையில்,
எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் அதிகளவில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் காஷ்மீர் பகுதியில் அமைதியை சீர்குலைக்க நாசவேலைகளில் ஈடுபடலாம். அவர்களை ஓடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.