நெருங்கி வரும் சுதந்திர தினம்-நெல்லையில் 2 அடுக்கு பாதுகாப்பு
நெல்லை: சுதந்திர தின விழாவையொட்டி நெல்லையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
சுதந்திரம் பெற்ற ஆண்டுகளி்ன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுதந்திர விழா கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இவற்றை தொடர்ந்து முன்னெச்சரிக்கை தமிழகத்தில் பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் டவுன், பெருமாள்புரம், மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டப்பட்ட 10 பைக்குகள் பறி்முதல் செய்யப்பட்டன. லாட்ஜிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கலெக்டர் அலுவலகம், மற்றும் வஉசி மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த ஆண்டும் 2 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு வரும் அனைவரும் மெட்டல் டிடேக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். இது தவிர மைதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்களில் மாடியில் இருந்து சுழலும் கேமரா மூலம் போலீசார் கண்காணிக்கின்றனர்.