ஆஸியில் தொடரும் அட்டகாசம் - பேட், பீர் பாட்டிலால் தாக்கப்பட்டார் இந்தியர்
சிட்னி: இந்தூரைச் சேர்ந்த மாணவர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேஸ்பால் பேட் மற்றும் பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் மோஹித் மங்கல். பொறியியல் மாணவரான இவர் சிட்னியில் படித்து வருகிறார். சனிக்கிழமை இரவு சிட்னியில் தான் பகுதி நேரமாக பணியாற்றி வரும் வர்த்தக வளாகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.
பீர் பாட்டிலை உடைத்து மங்கலின் தலையில் அவர்கள் அடித்துள்ளனர். பின்னர் ஒரு பேஸ்பால் பேட்டால் தாக்கியுள்ளனர். இதில் மங்கலுக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில்தான் ஆஸ்திரேலியா சென்று இனவெறித் தாக்குதல் குறித்து அந்த நாட்டு பிரதமர் கெவின் ரூட்டுடன் பேச்சு நடத்தி விட்டுத் திரும்பினார்.
அதன் பின்னர் மங்கலையும் சேர்த்து நான்கு இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் இந்தியர்கள் தரப்பில் பெரும் அச்சம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications