சாலை பாதுகாப்பு வரியை ரத்து செய்க - லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
நாமக்கல்: புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு வரி முறையினை ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
தமிழக அரசு 21.07.2009 அன்று விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக சாலை பாதுகாப்பு வரியை கொண்டு வந்துள்ளது. இந்த வரி இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனம் வரை போட்டப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக வாகனம் வாங்குவோர் அதை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும் போது இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ 500ம், கார்களுக்கு ரூ 1,500ம், லாரிகளுக்கு ரூ 2,500ம் வரியாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
ஏற்கனவே, லாரி உரிமையாளர்கள் சாலை வரி, சுங்க வரி, பசுமை வரி போன்ற பல்வேறு வரிகளை அரசுக்கு முறையாக செலுத்தி வருகின்றோம்.
மேலும், லாரி உரிமையாளர்களிடம் இருந்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு நிதியாக, காலாண்டு வரி செலுத்தும் வருகிறோம். தற்போது அதையும் ஒரு சதவீதம் கூடுதலாக அரசுக்கு செலுத்தி வருகின்றோம்.
சாலைகளில் விபத்து ஏற்படும் போது எதிரே வருகின்ற பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்யும் போது மூன்றாம் நபர் காப்பீடு என்ற பாலிசிக்கும் லாரி உரிமயாளர்கள் பணம் செலுத்தி வருகின்றோம்.
இவ்வாறு நாங்கள் அரசுக்கு பல வழிகளில் வரி செலுத்தி வருகின்றோம். இதில் மேலும் ஒரு வரியை எங்கள் மீது திணித்தால் எங்களால் தொழில் செய்ய முடியாது. இந்த வரியால் லாரி தொழில் நலிவடையுமே தவிர வளர்ச்சி பெறாது.
எனவே இந்த சாலை பாதுகாப்பு வரியை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications