பங்கு வர்த்தகத்தில் முறைகேடு - இந்தியா புல்ஸ் துணைத் தலைவர் கைது
கொல்கத்தா: இந்தியாபுல்ஸ் செக்யூரிட்டிஸ் என்ற பங்கு வர்த்தக நிறுவனத்தின் துணைத் தலைவரான சித்தார்த் தாகா, ஆன்லைன் பங்கு வர்த்தக முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவரின் ஆன்லைன் பங்கு வர்த்தக கணக்கில் புகுந்து முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா காவல்துறையின் இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறுகையில், அருணவா சக்கரவர்த்தி என்பவரின் ஆன்லைன் வர்த்தக கணக்கை ஹேக் செய்து அதில் புகுந்து மோசடி செய்துள்ளார் சித்தார்த் தாகா.
இதன் மூலம் அருணவா சக்கவர்த்திக்கு ரூ. 46 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேடான, சட்டவிரோதமான வழியில் அருணவா கணக்கில் வர்த்தகம் செய்துள்ளார் தாகா. இதன் மூலம் அவருக்கு பெரும் பணம் கிடைத்துள்ளது.
தனது கணக்கில் நுழைய அருணவா முயன்றபோது லாக் இன் செய்ய முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் விசாரணையில் இறங்கியபோது இந்தியாபுல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கணக்கைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் தாகா சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட தாகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 18ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications