தண்டையார் பேட்டை மருத்துமனையில் ஒரே நாளில் 1000 பேருக்கு சோதனை
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் ஒரே நாளில் ஏறத்தாழ 1,000 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக தங்களுக்கு இந்த நோய் இருக்கிறதா என்பதை அறிய பொதுமக்கள் பெருமளவில் ரத்த பரிசோதனை செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக தண்டையார்பேட்டை மருத்துவமனை, கிங் இன்ஸ்டிடியூட், பொது மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று காலையே திரளான மக்கள் கூடினார்கள்.
புறநோயாளிகள் பிரிவில் கூடி இருந்த ஏராளமான மக்களுக்கு, மருத்துவமனை நிர்வாகத்தினர், மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார்கள். பன்றி காய்ச்சலுக்கு தமிழகத்தில் முதல் பலியான வேளச்சேரி பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் வந்து இருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இங்கு பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 13 பேரின் ரத்தம், சளி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இன்று மட்டும் ஏறத்தாழ 1,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறோம் என்றார்.