பாபுவா நியூ கினியா-விமானம் விழுந்து 13 பேர் பலி
சிட்னி: ஆஸ்திரேலியா அருகே உள்ள பாபுவா நியூ கினியாவில் 13 பயணிகளுடன் சென்ற சிறிய விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி அனைவரும் பலியாயினர்.
அந் நாட்டின் போர்ட் மொரெஸ்பியிலிருந்து கொகுடா என்ற இடத்துக்கு சுற்றுலாப் பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.
கொகுடா அருகே மலைப் பகுதியில் மிக மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 9 ஆஸ்திரேலியர்கள், ஒரு ஜப்பானியர், பாபுவா நியூ கினியாவைச் சேர்ந்த 3 பேர் பலியாயினர்.
தொழில்நுட்ப கோளாறு-ரத்தான சென்னை விமானம்:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டிணம் செல்லவிருந்த ஜெட்லைட் விமானம் ஒன்று ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஜெட்லைட் விமானம் விசாகப்பட்டிணம் கிளம்பத் தயாரானது.
ஆனால், விமானம் கிளம்பத் தயாரான நிலையில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர்.
2 மணி நேரம் ஆகியும் விமானம் கிளம்பவில்லை. இதையடு்தது பயணிகள் நிறுவன அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். இதனால் அங்கு லேசான சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மதியம் 1.15 மணிக்கு தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாத காரணத்தால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளில் இருவர் கிங்பிஷர் விமானம் மூலமும், ஒருவர் ஏர் இந்தியா விமானம் மூலம் விசாகப்பட்டிணம் அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு இடமில்லாத காரணத்தால் இன்றைய விமானத்தில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.