வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ் கைது
நெல்லை: பாளையங்கோட்டையில் போலீஸ் வேடமிட்டு வாகனங்களில் சென்றவர்களிடம் வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள இஸ்மாயில் நகரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் நேற்று தனது நண்பர் சிதம்பரம் என்பவருடன் தனது காரில் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர்கள் கேடிசி நகர் அருகே வந்த போது ஒரு போலீஸ்காரர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து பணம் வாங்கி கொண்டிருந்தார். அவர், ஜெயராமனின் காரையும் மறித்து சோதனை நடத்தினார். பின்னர் ஜெயராமனிடம் காருக்கான ஆவணங்களை கேட்டார்.
ஜெயராமன் அனைத்து ஆவணங்களை காட்டிய பிறகு்ம் அந்த போலீஸ்காரர் பணம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து ஜெயராமன் அவரிடம் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
ஆனால் அந்த நபர் அவர் சரியான பதில் கூறாமல் மழுப்பினார். இதையடு்தது ஜெயராமன் நெல்லை மாநகர போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த போலீஸ்காரர் தப்பியோட முயன்றார்.
அப்போது அவரை பிடித்த ஜெயராமன், பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், அவர் தான் போலீஸ்காரர் இல்லை என்றும், பணத்துக்காக போலீஸ் வேஷமிட்டு வசூல் வேட்டை நடத்தியதாகவும் ஒப்பு கொண்டார். பின்னர் தனது பெயர் பாஸ்கர் மணி என்றும், பாளை கிருஷ்ணபுரத்தை சேர்ந்த நவமணி என்பவரின் மகன் என்றும் கூறினார்.