விவசாய உரத்தில் ரூ. 4,000 கோடி மோசடி-பிரதமருக்கு ஜெ. கடிதம்

அந்த கடிதம்..
விவசாயிகளுக்கு சலுகை விலையில் அளிக்கப்பட்ட பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை காரைக்காலில் இருக்கும் வைகை கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் காரைக்கால் குளோரேட்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் முறைகேடு செய்துள்ளன. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.
இந்திய அரசு, ரஷ்யா மற்றும் இஸ்ரேலில் இருந்து 1 டன், ரூ. 15 ஆயிரம் என்ற விலையில் பெட்டாஷ் உரங்களை இறக்குமதி செய்கிறது. இங்கிருந்து ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் டன் உரங்கள் தூத்துக்குடி, காக்கிநாடா, மங்களூர் வழியாக இந்தியாவுக்கு வருகிறது.
அதை அரசு விவசாயிகளுக்காக டன் ரூ. 5 ஆயிரம் என விற்பனை செய்கிறது. இவை பொட்டாசியம் குளோரைடு தயாரிப்பதற்கு மூலப் பொருளாக உள்ளது. இந்த பொட்டாசியம் குளோரைடு தான் பட்டாசு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
எனக்கு கிடைத்த தகவலின்படி, வைகை கெமிக்கல் நிறுவனத்துக்கு 9 மெட்ரிக் டன் அளவு மட்டுமே பொட்டாஷ் தயாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் தினமும் சுமார் 40 மெட்ரிக் டன் அளவு பொட்டாசியம் குளோரைடு உற்பத்தி செய்கிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக உரங்களை தேக்கி வைத்துள்ளது.
காரைக்கால் குளோரைடு நிறுவனம் 16 மெட்ரிக் டன் என்ற அனுமதி அளிக்கப்பட்ட அளவுக்கு பதிலாக 60 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. இங்கு அளவுக்கு அதிகமாக பெட்டாஷியம் குளோரைடு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இது இரு நிறுவனங்களுக்கு பொட்டாஷ் எப்படி சப்ளை செய்யப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபின் 2,000 மெட்ரிக் டன் பொட்டாஷ் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
மாநில அரசு உதவியுடன்...
இந்த நிறுவனங்கள் புதுச்சேரி காங்கிரஸ் அரசு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு உதவியுடன் விவசாயிகளுக்குச் சலுகை விலையில் வழங்க வேண்டிய பொட்டாஷைக் கடத்தியுள்ளன என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.
மேலும் பல்வேறு ஏஜென்சிகளுக்கு வெடிபொருள்கள் தயாரிப்பதற்கு பொட்டாசியம் குளோரைடு விற்பனை செய்திருக்கின்றன என்றும் தெரியவருகிறது. காரைக்காலைத் தவிர்த்து தமிழகத்திலும் பொட்டாசியம் விற்பனையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இந்த இரு நிறுவனங்கள் நடத்திய முறைகேட்டால் மத்திய அரசுக்கு இதுவரை சுமார் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கணக்கிடப்படுகிறது.
சிபிஐ விசாரணை...
இந்த முறைகேட்டில் பல மாநிலங்களுக்குத் தொடர்புள்ளது. இதற்கிடையில், மூடப்பட்டுள்ள இந்த நிறுவனங்களை திறக்க இரு மாநில அரசின் உதவியுடன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த கடிததத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
--












Click it and Unblock the Notifications