டாஸ்மாக் கடையில் பெரும் தீ - பாட்டில்கள் வெடித்துச் சிதறின - ரூ. 7.5 லட்சம் சேதம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் வெடித்துச் சிதறின.
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் மதுபான கடையில் திடீரென்று தீ கொளுந்து விட்டு எரிந்தது. அனல் தாங்காமல் மது பாட்டில்கள் வெடித்து சிதறின.
இது பற்றி செங்கல்பட்டு போலீசுக்கு தகவல் போனது. தீயணைப்புப் படையினரை உஷார்படுத்தினர் போலீஸார்.
உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 987 மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதம் அடைந்தன. மது விற்பனை செய்த பணம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 989 ரூபாயை பணப்பெட்டியில் வைத்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக பணம் தப்பியது.
மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications