அதிமுகவினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்-சாமி
மதுரை: 5 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் ஆதரவளிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபகாலமாக தேர்தலில் போட்டியிடாமலேயே கட்சி நடத்தி வரும் சாமி நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் 2011ல் சிறப்பான ஆட்சியை உருவாக்க ஜனதா கட்சி பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது(!). திராவிட இயக்கங்கள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழகத்திற்கு மதிப்பே இல்லை. தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நல்லது.
இபோது ஐந்து தொகுதிகளில் நடக்கும் இடைத் தேர்தலில் பா.ஜ., வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் கம்பம் பாஜக வேட்பாளரை திமுகவினர் மிரட்டியும் பணம் கொடுத்தும் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டுவிட்டனர்.
இடைத் தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்திருக்க கூடாது. அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க வேண்டும். இருந்தாலும் இப்போது பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பது உண்மை தான். அந்த எந்திரங்களை மேம்படுத்துவதோடு, வாக்காளர் யாருக்கு ஓட்டு போட்டார் என் சீட்டு அவருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்கு முன் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள், விடுதலை புலிகள் அழிந்த பிறகு பேச மறுக்கின்றனர்.
ஜெயலலிதாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுக்கிறார். இலங்கையில் சி்ங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவதாகக் கூறிவிட்டு உலக நாடுகளை ராஜபக்சே ஏமாற்றிரக் கொண்டுள்ளார்.
தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்றார்.