ஏர் இந்தியாவின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்-பிரதமர்
டெல்லி: ஏர் இந்தியாவின் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறியுள்ளார்.
பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசுத் துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, அரசிடம் ரூ.20,000 கோடி அளவுக்கு நிதி உதவி கேட்டுள்ளது.
இந்நிலையில் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங், ஏர் இந்தியாவை கைதூக்கிவிடுவது குறித்துப் பேசினார்.
அவர் கூறியதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் அந்த நிறுவனத்தின் முழுப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.
நாட்டின் கிழக்கு மாநிலங்கள் முழுமையான அளவு வான் வழித்தடங்களில் இணைக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மாநில விமானப் போக்குவரத்து வளர்ச்சியில் மத்திய அரசு தனி அக்கறை செலுத்தும் என்றார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல், நிச்சயம் ஏர் இந்தியா தனது பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு, தேசத்தின் பிரதான விமான போக்குவரத்து நிறுவனமாகத் திகழும், லாபம் ஈட்டும் என்று நம்புவதாகக் கூறினார்.