மலையில் உருண்டது பஸ்-ஹிமாச்சலில் 24 பேர் பலி
சிம்லா: ஹிமாச்சல பிரேதச மாநிலத்தில் பேருந்து ஒன்று மலையில் இருந்து உருண்டு விழுந்து ஏற்பட்ட விபத்தில் 24 பேர் பலியானார்கள். 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹிமாச்சல் பிரேதசம் மாநிலம் சிம்லாவில் இருந்து சுமார் 475 கிமீ தொலைவில் சம்பா மாவட்டம் உள்ளது. அதிக வெளி உலக தொடர்பில்லாத இந்த மாவட்டத்திலுள்ள சம்பா நகரை நோக்கி நேற்று மாலை பஸ் ஒன்று கொண்டிருந்தது.
அப்பகுதியில் போக்குவரத்து வசதி மிகவும் குறைவு என்பதால் மக்கள் அந்த பஸ்சில் நெருக்கடியடித்து கொண்டு ஏறினர். இந்நிலையில் அந்த பஸ் சலூனி கிராமத்துக்கு அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து மலையிலிருந்து உருண்டு 200 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் 24 பேர் பலியானார்கள். 39 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சம்பா மண்டல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மாநில போக்குவரத்து அமைச்சர் மொகிந்தர் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆளுனர் பிரபா ராவ், முதல்வர் பிரேம் குமார் தூமல் ஆகியோர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சம்பா மாவட்டத்தில் இது போன்ற விபத்துக்கள் சர்வ சாதாரணமானவை என அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை புள்ளி விபரங்களும் உறுதி செய்கின்றனர்.
10 ஆண்டில் 8 ஆயிரம் பேர் பலி...
கடந்த ஏப்ரல் மாதம் இப்பகுதியில் நடந்த விபத்தில் 19 பேரும், நேற்று முன்தினம் 6 பேரும் பலியாகியுள்ளனர். அதே போல் கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதியில் 8 ஆயிரம் பேர் இது போன்ற விபத்துக்களில் பலியாகி இருப்பதாகவும், 2007ம் ஆண்டில் மட்டும் 2,955 விபத்துக்கள் நடந்ததாகவும், அதில் 979 பேர் இறந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன்.
இந்த விபத்துகளுக்கு அதிக போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் கிடைக்கும் பஸ்சில் கூட்டமாக செல்வதும், அனுபவமற்ற தனியார் வாகன டிரைவர்களும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications