காபூல் நேடோ அலுவலகம் மீது தாக்குதல்-7 பேர் பலி
காபூல்: ஆப்கானி்ஸ்தானில் இன்று நேடோ தலைமையகத்தை குறி வைத்து தலிபான் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாயினர். மேலும் 90 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா தலைமையிலான நேடோ ராணுவ அமைப்பின் அலுவலகம் காபூலின் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தின் மீது இன்று காலை வெடிகுண்டுகளை நிரப்பிய காரில் வந்த தலிபான தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். இதி்ல் கார் வெடித்துச் சிதறியதில் 7 பேர் பலியாயினர். 90 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த அலுவலகத்தின் வெளியே உள்ள பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு இந்தத் தாக்குதலை தலிபான் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டடத்தின் அருகில் தான் அதிபர் மாளிகை, இந்திய, அமெரிக்கத் தூதரகங்கள் ஆகியவை உள்ளன.
அடுத்த வாரம் அந் நாட்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தத் தாக்குதலை தலிபான் நடத்தியுள்ளது. இப்போதையே அதிபர் ஹமீத் கர்சாய் மீண்டும் போட்டியிடும் இந்தத் தேர்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று மக்களுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதோடு, இதன் மூலம் எந்த இடத்திலும் தாங்கள் நினைத்த நேரத்தில் தாக்குதல் நடத்த முடியும் என்பதையும் அவர்கள் நிரூபித்துள்ளனர். இதனால் அவர்கள் அழைப்பு விடுத்துள்ள தேர்தல் புறக்கணிப்பு உத்தரவுக்கு மக்கள் பணியும் நிலை உருவாகும் என்று தெரிகிறது.