ஸ்வைன்:இந்தியா செல்ல வேண்டாம்-இலங்கை
கொழும்பு: பன்றி காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை சுகாதார மற்றும் உணவு துறை அமைச்சகத்தின் தலைமை தொற்று நோய் பிரிவின் தலைவர் டாக்டர் பாபா பலிஹவதானா கூறுகையில்,
பன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க இலங்கை மக்கள் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும். இலங்கையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிறைய பேர் இந்தியாவுக்கு புனித பயணம் செய்கின்றனர். இது தான் தற்போது இலங்கை சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய ஆபத்தாகும்.
அவர்கள் இந்தியா செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும், இல்லையென்றால் தங்களது பயணத்தை தள்ளி போட வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், நோயாளிகளிடம் இருந்து விலகி நிற்க வேண்டும்.
வெளிநாடுகளில் இங்கு வந்தவர்களுக்கு ப்ளு காய்ச்சல் இருக்கிறதா என சோதிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அவர்கள் தங்களுக்கு நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.