'மாயா மாயா எல்லாம் மாயா'...ஒரு மெகா மோசடி!
கடையநல்லூர்: கடையநல்லூர் வங்கியில் ரூ.4 கோடி கடன் வழங்க ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நெல்லையைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனத்தின் பெண் ஏஜென்டாக உள்ள மாயா ராமை கிரானைட் தொழில் தொடங்க திட்டமிட்ட தென்காசியை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் சந்தித்து கடனுதவி பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.
அவருக்கு கடையநல்லூரில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக மாயா ராம் உறுதியளித்தார். கடன் தந்தால் கமிஷன் தருவதாகக் கூறி வங்கி மேலாளர் அய்யா மணியையும் வளைத்துள்ளார் மாயா.
கடன் வாங்க வசதியாக ரூ. 5 கோடி டெபாசிட் வைத்திருந்த ஒருவரது கணக்கின் ஆவணங்களை போலியாக் தயார் செய்துள்ளார் மாயா. பின்னர் அவருக்கே தெரியாமல் அவரது டெபாசிட்டை ஜாமீனாக வைத்து வெங்கடேசனுக்கு ரூ. 2.65 கோடி கடன் பெற்றுத் தந்தார் மாயா. இதற்கு அய்யா மணி உதவினார்.
ஆனால், வங்கியின் ஆடிட்டிங்கின்போது இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டது. இதையடுத்து வெங்கடேசனிடம் மூத்த வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது மாயாவின் வண்டவாளங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து மாயாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடிக்கு உதவிய கிளை மேலாளர் அய்யா மணியை வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்த வழக்கு பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. மதுரை சிபிஐ பிரிவினர் நடத்திய விசாரணையில் டாக்டர் வெங்கடேசனுக்கு மோசடியாகக் கடன் வழங்க அய்யா மணி ரூ. 35 லட்சம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது.
இந் நிலையில் வெங்கடேசனை கடந்த 11ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதே போல லஞ்சம் வாங்கி வங்கி நிதியை மோசடி செய்த அய்யா மணியும் கைது செய்யப்பட்டார்.
ஆனால், தனக்கு வங்கி தந்த மொத்த பணத்தையும் மாயா ராம் சுருட்டிவிட்டதாக வெங்கடேசன் புகார் தந்தார்.
இதையடு்த்து இந்த வழக்கிலும் மாயா ராமை சிபிஐ கைது செய்துள்ளது. ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மாயா ராம் இந்த வழக்கிலும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications