உடல் உறுப்பு தானம்-ஹிதேந்திரனின் தாயாருக்கு கல்பனா சாவ்லா விருது
சென்னை: வீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதை இன்று தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
மறைந்த இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வீர செயல்கள் புரியும் தமிழக பெண்களுக்கு மாநில அரசு கல்பனா சாவ்லா விருதும், ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும், தங்க பதக்கமும் வழங்கி கெளரவித்து வருகிறது.
இந்த ஆண்டு இந்த விருதை விபத்து ஒன்றில் மூளைச்சாவை சந்தித்த சென்னை சிறுவன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்து 8 பேருக்கு மறு வாழ்வு தந்து அதன்மூலம் உடல் தானம் குறித்த விழிப்புணர்ச்சி அதிகரிக்க முக்கிய காரணமாக அந்த சிறுவனின் தாயார் டாக்டர் புஷ்பாஞ்சலி,
சிறுநீரகவியல் டாக்டர் ராஜ மகேஸ்வரி, உசிலம்பட்டி சேர்ந்த ஊனமுற்ற விளையாட்டு வீராங்கனை ராஜலட்சுமி ஆகியோருக்கு இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
நடிகர் லாரன்ஸ்க்கு விருது...
ஊனமுற்ற குழந்தைகளுக்கு தனது வீட்டில் தங்க இடம், உதவி செய்து நடிகர் லாரன்ஸ், காஞ்சிபுரம் ஊனமுற்றோர் சங்க அதிகாரி மனோகரன், ஊனமுற்றார் நல்வாழ்வுக்காக பாடுபடும் சென்னை யாத்வே நிறுவனம் ஆகியோருக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார்.
சிறந்த மருத்துவருக்கான விருது கே.கே.நகர் டாக்டர் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. சிறந்த தனியார் நிறுவன ஊழியருக்கான விருதை திருச்சி பாண்டிக்கு அளிக்கப்பட்டது.
பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பணியாற்றிய நெல்லை மாவட்டம் ஆய்க்குடி, அமர் சேவா நிறுவனத்துக்கும் முதல்வர் விருதுகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஊனமுற்ற குழந்தைகள் 10 பேருக்கு இனிப்புகளை வழங்கினார். அவர்களுடன் புகைப்படும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
விருதை எனக்காக பெறவில்லை...
முதல்வரிடம் விருது பெற்ற ஹிதேந்தரனி்ன் தாயார் புஷ்பாஞ்சலி கூறுகையில்,
இந்த விருதை எனக்காகப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்த விருது பெறுவதன் மூலம் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படும் என்பதற்காக பெற்று கொள்கிறேன் என்றார்.
முதல்வர் கையால் பெற்றது மகிழ்ச்சி...
நடிகர் லாரன்ஸ் கூறுகையில், இந்த விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. தமிழக முதல்வர் கருணாநிதியின் கைகளால் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊனமுற்ற குழந்தைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றார் லாரன்ஸ்.