காவிரி மின் திட்டங்கள்-சென்னையில் கர்நாடக அதிகாரிகள் பேச்சு
சென்னை: காவிரி மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக தமிழக, கர்நாடக உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நான்கு நீர் மின் உற்பத்தி திட்டங்களை தேசிய நீர் மின் கழகம் அமைக்க திட்டமிட்டு்ள்ளது. இதன்படி தமிழகத்தில் ராசிமனல் பகுதியில் 360 மெகாவாட், ஓகேனக்கலில் 120 மெகாவாட், கர்நாடகத்தில் சிவசமுத்திரம், 270 மெகாவாட், மேகதாது 400 மெகாவாட் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
ஆனால், கர்நாடக அரசு சிவசமுத்திரம் திட்டத்தை தாங்கள் தன்னிச்சையாக செய்ய போவதாக தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையடுத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த மத்திய அரசு மின் துறை செயலர் ஹரிசங்கர் பிரம்மா தலைமையில் கூட்டம் ஒன்றை வரும் 17ம் தேதி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெங்களூரில் திருவள்ளுவருக்கும், சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னருக்கும் சிலை திறக்கப்பட்டது. அப்போது காவிரி, ஓகேனக்கல் போன்ற இரு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று இரு மாநில முதல்வர்களும் அறிவித்தனர்.
இந் நிலையில் மின் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக, கர்நாடக மின்சாரம் மற்றும் நீர் வளத்துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.