சென்னை எல்டாம்ஸ் சாலைக்கு கமல் பெயர்-சரத் கோரிக்கை
கலைஞானி கமல்ஹாசனின் பெயரை, சென்னை எல்டாம்ஸ் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கமல்ஹாசனுக்கு இது பொன் விழா ஆண்டு. 1959ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வந்து தசாவதாரம் வரை நடிப்பில் விஸ்வரூபம் காட்டி நிற்கும் கமல்ஹாசனுக்கு பிரமாண்ட விழாவை விஜய் டிவி எடுக்கிறது.
அடுத்தமாதம் இரண்டாவது வாரத்தில் சென்னையில் இந்த விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கான அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசுகையில்,
நான் எப்போது அவரை சந்தித்தாலும் நான் உங்களுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கேட்பேன். அந்த அளவுக்கு நடிப்பால் சக கலைஞர்களை ஈர்த்தவர் அவர்.
இப்போதும் அவர் தனக்கே உரிய சுறுசுறுப்புடன் 10 வேடங்களில் தசாவதாரம் மாதிரி சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். நடிப்பில் அவர் நூற்றாண்டு காணும்போது ஒரே படத்தில் 25 கேரக்டர்களில் கூட நடித்து நம்மை வியக்க வைத்துக் கொண்டிருப்பார்.
பொன்விழா ஆண்டில் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அவருக்கு கவுரவம் சேர்க்கும் விதத்தில் அவர் வசிக்கும் எல்டாம்ஸ் சாலைக்கு டாக்டர் கமல்ஹாசன் சாலை என்று அரசு பெயர் சூட்ட வேண்டும். இதற்காக நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்றார்.
இயக்குநர் சேரன் பேசுகையில், சினிமாவில் புதிய முயற்சிகள் எல்லாமே கமல் சாரிடம் இருந்துதான் தொடங்கியிருக்கின்றன. சினிமாவை யதார்த்தமாக மாற்ற ரொம்பவே மெனக்கெட்டவர்.
அவர் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடித்த கால கட்டத்தில் அவரது நடிப்பில் ஈர்க்கப்பட்ட நான் இளஞ்சேரன் என்ற என் சொந்தப் பெயரை லவ்லிஹாசன் என்று மாற்றி வைத்துக்கொண்டு ஊருக்குள் உலா வந்தேன்.
சினிமாவில் சேர ஆசைப்பட்டு வந்த நேரத்தில் கமல் சார் நடித்த மகாநதி படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது அவரது அணுகுமுறை பிடிக்காமல் நானும் 4 உதவி இயக்குனர்களும் சண்டை போட்டுவிட்டு வெளியேறினோம்.
இப்போது நானும் டைரக்டராகி 8 படங்களை இயக்கிய நிலையில் தான், அன்றைய அவரது அணுகுமுறையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொள்ளாமல் எந்த அளவுக்கு அவரை காயப்படுத்தியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.
இன்று வரையிலும் அந்த வருத்தம் எனக்குள் நீடித்துக் கொண்டுதானிருக்கிறது.
அவருக்கு நானும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விஜய் டிவி நடத்தும் அவருக்கான பாராட்டு விழாவில் என்னையும் இணைத்துக் கொண்டேன் என்றார்.
இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், யூகி சேது, நடிகை குஷ்பு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.












Click it and Unblock the Notifications