பெண் கஞ்சா வியாபாரியை எரித்து கொன்ற போலீஸ்?
தேனி: தன்னை போலீஸ்காரர் உள்ளிட்ட நான்கு பேர் தீ வைத்து எரித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துவிட்டு பெண் கஞ்சா வியாபாரி இறந்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி போலீஸ்சரகம் கொப்பையன்பட்டியைசேர்ந்தவர் வீரணன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காமாயி அம்மாள் (36).
காமாயி அம்மாள் கஞ்சா விற்று வந்தார். இந்த வழக்கில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வந்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காமாயி அம்மாள், அவருடைய மகள் ரோஜா, உறவினர் ஒருவரின் மகன் விக்னேஷ்(12) ஆகிய 3 பேரும் தீக்காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
காமாயி அம்மாள் உயிருக்குப் போராடி வருவதாக தகவல் போனதால், ஆண்டிப்பட்டி மாஜிஸ்திரேட், சுந்தரய்யா மருத்துவமனைக்கு வந்து மரண வாக்குமூலம் பெற்றார்.
அப்போது காமாயி கூறுகையில், ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலைபார்க்கும் சரவணன் எனது உறவினர். இவர் மேலும் 3 பேருடன் எனது வீட்டுக்கு வந்து, கஞ்சா விற்கிறாய். உன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் போலீஸ் நிலையத்துக்கு வா என்று அழைத்தார்.
அதற்கு நான், 3 நாட்களுக்கு முன்பு தான் கஞ்சா வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து இருக்கிறேன். நான் இப்போது கஞ்சா வியாபாரம் செய்வது கிடையாது. அதனால் போலீஸ் நிலையம் வர மாட்டேன் என்று கூறினேன்.
உடனே அவர்கள் என் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டனர். இதைப்பார்த்த எனது மகள் ரோஜா, உறவினரின் மகன் விக்னேஷ்(12) ஆகியோர் தீயை அணைத்தனர். இதில் அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆம்புலன்சுக்கு தெரிவித்தனர். அவர்கள் வந்து எங்களை அழைத்து வந்து தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் காமாயி அம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். ரோஜா, சிறுவன் விக்னேஷ் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காமாயி அம்மாள் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications