பிகாரில் ஐஏஎஸ் அதிகாரிக்கு பன்றி காய்ச்சல்
பாட்னா: இதுவரை பன்றி காய்ச்சல் பரவாமல் இருந்த பிகாரிலும் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனில் இருந்து பிகார் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வந்த நிலையில் பிகார் மாநிலத்தில் நேற்று வரை இந்த நோய் பரவியதற்கான அறிகுறி இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்போது சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் மருத்துவர்கள் பார்வையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு புரோபைலேக்டிக் டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிகார் மாநில அரசு விரைவில் வைரஸ் சோதனை மையம் ஒன்றை பாட்னாவில் துவக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
ஒரே நாளில் 220 பேருக்கு பரவியது...
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் பன்றி காய்ச்சல் 220 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக மும்பையில் 90 பேரும், புனேவில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 20, பெங்களூரில் 11 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகராஷ்டிராவில் தான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அறிகுறிகளுடன் இருக்கும் மாணவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிர சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.