ஆப்கன் அதிபர் கர்சாய் வீடு மீது ராக்கெட் வீச்சு
காபூல்: ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயின் வீட்டின் மீது ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் சுற்றுச்சுவர் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக வேறு உயிரிழப்பு ஏதும் இல்லை.
அதேபோல காபூலில் உள்ள போலீஸ் தலைமையகம் மீதும் தீவிரவாதிகள் ராக்கெட் வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்னும் 2 நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடந்த முதல் தாக்குதலில் கர்சாய் தங்கியுள்ள மாளிகையின் சுற்றுச் சுவர் மட்டும் உடைந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது ராக்கெட் வீசப்பட்டது.
தலிபான்களின் இந்த தாக்குதலால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் உயிரிழப்பு ஏதும் இல்லை. அதிபர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், அதை சீர்குலைக்கும் முகமாகவே இந்த தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களை தாங்களே நடத்தியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ராய்ட்டர் நிறுவனத்திற்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
நான்கு ராக்கெட்களை வீசி தங்களது போராளிகள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications