ஸ்வைன் பலி 30 ஆனது - பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள்
டெல்லி: பன்றிக் காய்ச்சல் சிறார்களை அதிக அளவில் தாக்குவதால், அதைக் கட்டுப்படுத்த பள்ளிக் கூடங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. அதன்படி தினசரி காலை நடக்கும் காலை பிரார்த்தனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மேலும் மாணவர்கள் உட்காரும் முறையிலும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன.
இந்த நிலையில் இன்று பன்றிக் காய்ச்சலுக்கு மும்பையில் 7 மாதக் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை இந்தியாவில் 30 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த அந்தக் குழந்தை கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 16ம் தேதி பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அக்குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது. இதையும் சேர்த்து தற்போது 30 பேர் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் - இறைவணக்கம் ரத்து
பன்றிக் காய்ச்சலால் சிறார்கள்தான் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்த பள்ளிக் கூடங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது வெளியிடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளில் கூறப்பட்டுள்ளதாவது...
- பள்ளிக் கூடங்களில் தினசரி காலை நடக்கும் காலை பிரார்த்தனை அல்லது இறை வணக்க கூட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த சமயத்தில், மாணவர்கள் மொத்தமாகவும், நெருக்கமாகவும் இருப்பதால் அவர்களுக்குள் வைரஸ் பரவல் எளிதாகும் என்பதால் இந்த ரத்து நடவடிக்கை.
- அதேபோல வகுப்பறைகளில் மாணவர்கள் மிக மிக நெருக்கமாக உட்காருவதை தடுக்கும் நடவடிக்கைகளும் பரி்நதுரைக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு மாணவரையும் தினசரி வகுப்பாசிரியர் தனித் தனியாக சோதனை செய்ய வேண்டும். யாருக்கேனும் பன்றிக் காய்ச்சலுக்கான வெளிப்புற அறிகுறிகள் இருப்பதாக தெரிந்தால், உடனடியாக அந்த மாணவன் அல்லது மாணவியை வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். உரிய முறையில் சிகிச்சை தருமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒரு வாரம் விடுமுறையும் அளிக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துப் பள்ளிகளும் கண்டிப்பாகவும், முறையாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என ஆசாத் தெரிவித்துள்ளார்.
மேலும், பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.