மனைவியை கொன்று கொள்ளையர் கைவரிசை' நாடகம்-கணவன் கைது, மாமனார் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவியை தானே கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதை திசை திருப்ப கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக நாடகமாடிய கணவரும் மாமனாரும் கைது செய்யப்பட்டனர்.

தனிக் குடித்தனம் போக வற்புறுத்தியதாலும், தனது பெற்றோரை விஷம் வைத்துக் கொல்வேன் என்று மிரட்டியதாலும் இந்தக் கொலையைச் செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (29), இவரது மனைவி ஜெயஸ்ரீ (26) இருவரும் ஏர்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு 2 வயது குழந்தை உள்ளது.

இவர்களுடன் செந்தில்குமாரின் பெற்றோர் சரவணகுமார், வனஜா தம்பதியும் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை படுக்கை அறையின் பின்புற வாசலில் ஜெயஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி கழுத்தில் இரு வெட்டுக் காயங்களுடன் பிணமாகிக் கிடந்தார்.

இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் செந்தில்குமார் கூறுகையில், அதிகாலையில் குழந்தை அழுவதை கண்டுதான் நான் கண்விழித்தேன். அப்போது படுக்கையில் மனைவி ஜெயஸ்ரீயை காணாததால் சமையல் அறைக்கு சென்று பார்த்தேன், அங்கும் அவர் இல்லாததால் படுக்கை அறையில் உள்ள பின்புற வாசல் கதவை திறந்து வெளியே சென்று பார்த்தேன், அங்கு படிக்கட்டில் ஜெயஸ்ரீ பிணமாக கிடந்தார் என்றார்.

அவர் கூறியதை வைத்து, இரவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ஜெயஸ்ரீ கதவை திறந்து வெளியே வந்திருக்கலாம் என்றும், அப்போது நகைக்காக கொள்ளையர்கள் ஜெயஸ்ரீயை கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதினர்.

ஆனால், சம்பவ இடத்தைப் பார்வையிட்ட புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட், இந்த விவகாரத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டது போலத் தெரியவில்லை என்பதை பார்த்தவுடனே கண்டுபிடித்தார். துப்பு துலக்க போலீசாருக்கு சில ஆலோசனைகளையும் வழங்கிவிட்டுச் சென்றார்.

இதையடுத்து செந்தில்குமாரிடம் போலீசார் மீண்டும் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேச ஆரம்பிக்கவே அவர் மீதே சந்தேகம் வலுத்தது.

இரவில் பின் பக்கக் கதவை ஜெஸ்ரீ ஏன் திறந்தார், அவரை கொள்ளையர்கள் தாக்கி நகைகளை பறித்தபோது அலறல் குரல் செந்தில்குமாருக்கும் அவரது பெற்றோருக்கும் கேட்கவில்லையா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

மேலும் ஜெயஸ்ரீ வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தால் கழுத்தில் இருந்து ரத்தம் மட்டுமே வெளியேறி இருக்கும். ஆனால் ஜெயஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததால் அவர் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது விஷம் கொடுத்து பின்னர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கும், ஜெயஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் விசாரணையின்போது தெரியவந்தது.

இந் நிலையில் மருத்துவமனையில் நடந்த ஜெயஸ்ரீயின் உடல் பரிசோதனையில் அவர் மூச்சு திணறலால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இறந்த பின்னரே கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இந்த தகவல்களை வைத்து செந்தி்ல்குமாரை போலீசார் மடக்கியபோது மனைவி ஜெயஸ்ரீயை தானே கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

பின்னர் மனைவியை மூச்சுத் திணற வைக்க பயன்படுத்திய துண்டு, கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை தனது கட்டிலின் கீழ் உள்ள பெட்டியில் இருந்து எடுத்துத் தந்தார்.

கொள்ளைக்காக நடந்த கொலை போலக் காட்ட தாலி சங்கிலியின் ஒரு பகுதியை வெட்டி ஹெல்மட்டில் மறைத்து வைத்திருந்தார். அதையும் எடுத்துத் தந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக கமிஷ்னர் ஜாங்கிட் நிருபர்களிடம் கூறுகையில்,

ஆரம்பத்திலிருந்தே செந்தில்குமாரின் பேச்சும் நடவடிக்கைகளும் சந்தேகப்படும் வகையில் இருந்தன. தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில் ஜெயஸ்ரீ மூச்சு திணறி இறந்தபின் கத்தியால் அறுக்கப்பட்டது தெரியவந்தது.

தனிக்குடித்தனம் நடத்த வராவிட்டால், தனது பெற்றோரை உணவில் விஷம் வைத்து கொலை செய்வேன் என மிரட்டியதால் மனைவியை கொலை செய்ததாக, கணவர் செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் செந்தில்குமாரின் தந்தைக்கு தொடர்பு உள்ளதா என்றும் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். போலீசாரை திசை திருப்ப நடத்தப்பட்ட இந்த நாடகத்தை போலீசார் திறமையாக செயல்பட்டு முறியடித்து உண்மையை கண்டுபிடித்தனர் என்றார்.

இந் நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமாரின் தந்தை சரவணகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

செந்தில்குமார் பரபரப்பு வாக்குமூலம்..

கொலை குறித்து போலீசாரிடம் செந்தில்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

4 ஆண்டுகளுக்கு முன் நானும் ஜெயஸ்ரீயும் காதலித்து கலப்பு திருமணம் செய்துக் கொண்டோம். எங்களுடன் எனது பெற்றோர் வசித்து வந்தனர். இதற்கு எனது மனைவி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

தனிகுடித்தனம் போக வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்றிரவும் தனிக்குடித்தனம் போவது பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது.

நள்ளிரவு 1.30 மணி வரை எங்களுக்குள் சண்டை நடந்தது. அப்போது ஜெயஸ்ரீ தனிக்குடித்தனம் வர தடையாக உள்ள எனது பெற்றோரை உணவில் விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டினார். மனைவியின் இந்த வார்த்தைகள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவளைக் கொன்றால் தான் பெற்றோரை பாதுகாக்க முடியும் என நினைத்தேன். துண்டை எடுத்து ஜெயஸ்ரீயின் முகத்தில் போட்டு மூடி அதைக் கொண்டு கழுத்தை இறுக்கினேன். இதில் ஜெயஸ்ரீ மயங்கி விழுந்தார்.

அவரது வாயில் நுரை தள்ளியிருந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு கழுத்தை அறுத்தேன். போலீசாரிடம் இருந்து தப்பிக்க நகைகளை கொள்ளையடிப்பதற்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடினேன்.

ஜெயஸ்ரீயின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தேன். பாதியை கழுத்தில் போட்டுவிட்டு மீதி நகையை ஹெல்மட்டில் மறைத்து வைத்தேன் என்று கூறியுள்ளார்.

கொலை செய்தவுடன் பதற்றமடைந்த செந்தில்குமார் தனது தந்தை சரவணகுமாரை எழுப்பி விவரத்தை கூறி உள்ளார். அவர் கொலையை மறைத்து நாடகமாட திட்டம் வகுத்து கொடுத்தோடு தடயங்களை அழித்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரவணகுமாரையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+