இடைத் தேர்தலில் 68% வாக்குகள் பதிவு!
ஐந்து தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
அதிமுகவின் தேர்தல் புற்ககணிப்புக்கு இடையே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஐந்து தொகுதிகளிலும் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் எனத் தெரிகிறது. சரியான புள்ளி விவரத்தை இரவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
கம்பம்-75, பர்கூரில் 70 சதவீதம்...
கம்பம் தொகுதியில், கிட்டத்தட்ட 75 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது.
அதேபோல, பர்கூரில், இறுதிக் கட்ட நிலவரப்படி 70 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இளையாங்குடியில் 65 சதவீதத்திற்கும் அதிகமாகவும், கம்பம் தொகுதியில் சுமார் 64.5 சதவீத வாக்குகளும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
கம்பத்தில் மட்டும் வன்முறை...
கம்பம் தொகுதியில் மட்டுமே இன்று வன்முறை மூண்டது. இருப்பினும் இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. மற்ற நான்கு தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.
ஒரு இடத்தில் கூட மின்னணு இயந்திரம் பாதிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.
ஐந்து தொகுதிகளிலும் 1136 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் பெரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகள் நின்று வாக்களித்தனர்.
இந்தத் தொகுதிகளிலும் வெளி மாநில அதிரடிப்படைப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வாக்குப் பதிவு விவரங்களை உடனுக்குடன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
வாக்குப் பதிவு முடிவடைந்ததும், மின்னணு எந்திரங்களின் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள குளோஸ்' பட்டன் அழுத்தப்பட்டது.
வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக வெப் கேமரா மூலம் பதிவு செய்து இணைய தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை வரும் 21ம் தேதி நடைபெறும்.
வாக்களிக்க முடியாத வேட்பாளர்கள்..
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி, சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி, பாஜக வேட்பாளர் சந்தனக்குமார் மற்றும் தேமுதிக வேட்பாளர் ஆகியோர் இன்று வாக்களிக்கவில்லை.
தேமுதிக வேட்பாளருக்கு ஓட்டு சென்னையில் உள்ளது. மற்ற 3 பேருக்கும் தூத்துக்குடியில் உள்ளதால் அவர்கள் வாக்களிக்க முடியவில்லை.
ஒரு தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் அனைவருக்குமே அந்தத் தொகுதியில் ஓட்டு இல்லாதது இதுவே முதல் முறையாக இருக்கும் எனத் தெரிகிறது.
திமுக பர்கூர், இளையாங்குடி, கம்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டதுது. காங்கிரஸ் தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் நின்றது.
தேமுதிக நான்கு தொகுதிகளில் அக்கட்சியின் பெயரிலும், பர்கூரில் மட்டும் சுயேச்சை வேட்பாளர் என்ற அந்தஸ்துடனும் களத்தில் போட்டியிட்டது. பாஜகவும் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் கம்பம் தொகுதி வேட்பாளர் தடாலடியாக திமுகவுக்குப் போய் விட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீவைகுண்டம், பர்கூர் தொகுதிகளிலும், சிபிஎம் தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளிலும் போட்டியிட்டன.
சட்டசபையில் இப்போது கட்சிகளின் பலம்:
மொத்த தொகுதிகள் - 235
திமுக - 95
அதிமுக - 58
காங்கிரஸ் - 34
பாமக - 18
சிபிஎம் - 9
சிபிஐ - 6
மதிமுக - 3
விடுதலைச் சிறுத்தைகள் - 2 (செல்வம் ராஜினாமா செய்து விட்டார் - ஆனால் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை)
தேமுதிக - 1
சுயேச்சை - 1
நியமனம் - 1