For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே நாள் மழையில் ஸ்தம்பித்துப் போன சென்னை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை பெய்த மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக மாறி மக்களை அவதிக்குள்ளாக்கி விட்டது.

இது தென் மேற்கு பருவமழைக் காலம். இக்காலகட்டத்தில் தமிழகத்தில் பெருமளவில் மழை இருக்காது. மாறாக, கேரளாவையொட்டியுள்ள பகுதிகளில் மட்டும் மழை இருக்கும்.

ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு பருவ காலத்தில் அவ்வப்போது மழையும், பெருமளவில் வெயிலும் அடித்து மக்களைக் குழப்பிக் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக சென்னை நகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நிலைமை மாறியது. சூரியனுக்கு இன்று விடுமுறையா என்று மக்கள் குழம்பிப் போகும் வகையில் காலையில் சுத்தமாக வெயிலே இல்லை.

காலை ஏழரை மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. கிட்டத்தட்ட சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் அனைத்திலும் மழை கொட்டியது. சில பகுதிகளில் அதிகாலையிலேயே மழை பெய்யத் தொடங்கி விட்டது.

பெரிய மழையாக இல்லாமல், மிதமான மழை மற்றும் தூறலாக பெய்த இந்த மழை நிற்காமல் மதியம் 2 மணி வரையிலும் கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியும், தண்ணீருமாக மாறிப் போயின. வாரத்தின் முதல் நாளான நேற்று காலையில் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றோர் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது.

விடாமல் பெய்த மழை நின்று மாலையில்தான் லேசான வெயில் அடிக்கத் தொடங்கியது. இருந்தாலும் மக்களின் இயல்பு நிலை திரும்ப வெகு நேரமானது.

இன்று காலை முதல் சென்னையில் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,

தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகம் மற்றும் ஆந்திர கரையை ஒட்டிய பகுதியில் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் 5.8 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு சுழற்சி உருவாகி உள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும். ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்.

புயல் சின்னம் இல்லை...

வங்கக் கடலில் தற்போது புயல் சின்னம் எதுவும் இல்லை. வடகிழக்கு பருவமழையும் தொடங்கவில்லை. நேற்று முன்தினம் மாலை வெப்ப சலனத்தால் மழை பெய்தது. வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் ஏற்பட்டு உள்ள சுழற்சி காரணமாக நேற்று காலை முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது.

பருவக்காற்றின் அச்சானது இமயமலை அடிவாரத்தில் இருக்கும்போது வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் சுழற்சி ஏற்படும். அதன்படி இப்போது சுழற்சி உருவாகி இருக்கிறது. மழை பெய்வதற்கு ஏற்ப காற்றின் போக்கும் சாதகமாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றார்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக மேட்டூர் அணைப் பகுதியில் 13 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

மழை காரணமாக சென்னை நகரில் மழை கோட், தொப்பி உள்ளிட்டவற்றின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. கொட்டும் மழையில் ரெயின் கோட் போட்டுக் கொண்டு வியாபாரிகள் தொப்பி உள்ளிட்டவற்றை விற்பதைக் காண முடிந்தது. மழை வராது என்ற நினைப்பி்ல் வெளியில் வந்த பலரும், திடீர் மழையால் தடுமாறிப் போய் தலையில் போட்டுக் கொள்ளும் மழைத் தொப்பியையாவது வாங்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கியதையும் காண முடிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X